| மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் | 
| 42. சென்னிப்பத்து | 
| திருப்பெருந்துறையில் அருளியது | 
| சிவவிளைவு | 
| அறுசீர் ஆசிரிய விருத்தம் | 
| தேவ தேவன்மெய்ச் சேவகன் தென்பெ ருந்துறை நாயகன்
 மூவராலும் அறியொ ணாமுத
 லாய ஆனந்த மூர்த்தியான்
 யாவ ராயினும் அன்பரன்றி
 அறியொ ணாமலர்ச் சோதியான்
 தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம்
 சென்னி மன்னிச் சுடருமே.
 | 1 | 
| அட்ட மூர்த்தி அழகன், இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான்
 சிட்டன் மெய்ச்சிவ லோக நாயகன்
 தென்பெருந் துறைச் சேவகன்
 மட்டு வார்குழல் மங்கை யாளையோர்
 பாகம் வைத்த அழகன்தன்
 வட்ட மாமலர்ச் சேவ டிக்கண்நம்
 சென்னி மன்னி மலருமே.
 | 2 | 
| நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன்
 தெங்கு சோலைகள் சூழ்பெ ருந்துறை
 மேய சேவகன் நாயகன்
 மங்கை மார்கையில் வளையுங் கொண்டெம்
 உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
 பொங்கு மாமலர்ச் சேவ டிக்கண்நம்
 சென்னி மன்னிப் பொலியுமே.
 | 3 | 
| பத்தர் சூழப் பராபரன் பாரில் வந்து பார்ப்பானெனச்
 சித்தர் சூழச் சிவபிரான்
 தில்லை மூதூர் நடஞ்செய்வான்
 எத்த னாகிவந் தில்புகுந்தெமை
 ஆளுங் கொண்டெம் பணிகொள்வான்
 வைத்த மாமலர்ச் சேவடிக்கண்நம்
 சென்னி மன்னி மலருமே.
 | 4 | 
| மாய வாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடா வகைநல்கினான்
 வேய தோளுமை பங்கன்
 எங்கள் திருப்பெருந்துறை மேவினான்
 காயத் துள்ளமு தூற ஊறநீ
 கண்டு கொள்ளென்று காட்டிய
 சேயமா மலர்ச்சேடிக் கண்நம்
 சென்னி மன்னித் திகழுமே.
 | 5 | 
| சித்த மேபுகுந் தெம்மையாட் கொண்டு தீவினை கெடுத்துய்யலாம்
 பத்தி தந்துதன் பொற்கழற்கணே
 பன்மலர் கொய்து சேர்த்தலும்
 முத்தி தந்திந்த மூவுலகுக்கும்
 அப்பு றத்தெமை வைத்திடும்
 அத்தன் மாமலர்ச் சேவடிக்கண்நம்
 சென்னி மன்னி மலருமே.
 | 6 | 
| பிறவி யென்னுமிக் கடலை நீந்தத்தன் பேரருள் தந்தருளினான்
 அறவை யென்றடி யார்கள்
 தங்களருட்கு ழாம்புக விட்டுநல்
 உறவு செய்தெனை உய்யக்கொண்ட
 பிரான்தன் உண்மைப் பெருக்கமாம்
 திறமை காட்டிய சேவடிக்கண்நம்
 சென்னி மன்னித் திகழுமே.
 | 7 | 
| புழுவி னாற்பொதிந் திடுகுரம்பையிற் பொய்த னையொழி வித்திடும்
 எழில்கொள் சோதியெம் ஈசன்எம்பிரான்
 என்னுடை யப்பன் என்றென்று
 தொழுத கையினராகித் தூய்மலர்க்
 கண்கள் நீர்மல்குந் தொண்டர்க்கு
 வழுவி லாமலர்ச் சேவடிக்கண்நம்
 வல்வி னைப்பகை மாய்த்திடும்.
 | 8 | 
| வம்ப னாய்த்திரி வேனை வாவென்று வல்வி னைப்பகை மாய்த்திடும்
 உம்ப ரான்உல கூடறுத்தப்
 புறத்த னாய்நின்ற எம்பிரான்
 அன்ப ரானவர்க் கருளி மெய்யடி
 யார்கட் கின்பந் தழைத்திடுஞ்
 செம்பொன் மாமலர்ச் சேவடிக்கண்நம்
 சென்னி மன்னித் திகழுமே.
 | 9 | 
| முத்த னைமுதற் சோதியை முக்கண் அப்பனை முதல்வித்தினைச்
 சித்த னைச்சிவ லோக
 னைத்திரு நாமம் பாடித்திரிதரும்
 பத்தர் காள்இங்கே வம்மின்
 நீர்உங்கள் பாசந்தீரப் பணிமினோ
 சித்த மார்தருஞ் சேவடிக்கண்நம்
 சென்னி மன்னித் திகழுமே.
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் |